Thursday 29 December 2016

ஜவ்வரிசி ட்ரை கலர் பொங்கல்

தேவை
ஜவ்வரிசி -- 1 கப்
பயத்தம்பருப்பு  --  1/8 கப்
மைசூர் பருப்பு (Red Masoor Dhal)  --  1/8 கப்
இஞ்சி  -- சிறுதுண்டு
பச்சை மிளகாய்  --  2
மிளகு  --  6 - 8
மிளகு சீரகப்பொடி  --  1 டீஸ்பூன்
கருவேப்பிலை --  1 கொத்து
முந்திரி, திராட்சை  --  தலா 10
நெய்  --6 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி  --  சிறிது
பொடியாக நறுக்கிய காரட், காலிஃபிளவர், உரித்த பச்சைபட்டாணி -- 1/4 கப்
உப்பு

செய்முறை
பருப்புகளை வெறும் வாணலியில் சற்று வறுத்து, அவற்றுடன் காய்கறிகள் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
ஜவ்வரிசியை தனியாக லேசாக வறுத்து வேகவிடவும்.
எல்லாம் ஒன்றாக சேர்த்து உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து கிளறவும்.

இஞ்சி, பச்சைமிளகாயை சிறு துண்டுகளாக்கவும்.பாதி நெய்யை சுடவைத்து அதில் இஞ்சி, ப. மிளகாய், மிளகு, கறிவேப்பிலை, மிளகு சீரகப்பொடி தாளித்து கொட்டவும். மீத நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும்.
இதில் வெங்காயம், கரம் மசாலா சேர்த்து வதக்கி எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட அருமையாக இருக்கும்.


Monday 26 December 2016

கல்யாண பொங்கல்

தேவை:
பச்சை அரிசி  --1 கப்
பயத்தம்பருப்பு --¼ கப் 
நெய் -- 8 டீஸ்பூன் 
பால் -- ¼ கப்
பெருங்காயப்பொடி -- சிறிது
மிளகு --1 டீஸ்பூன் 
சீரகம் -- 1 டீஸ்பூன்
இஞ்சி -- 1 சிறிய துண்டு 
முந்திரி பருப்பு -- 12
திராட்சை -- 10
மிளகு சீரகப்பொடி --½ டீஸ்பூன் 
கறிவேப்பிலை -- 1 கொத்து 
கடுகு - 2 டீஸ்பூன் 
மஞ்சள்பொடி - 1½ டீஸ்பூன் 
உப்பு -- தேவையான அளவு

செய்முறை 
அரிசியுடன்  பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். அத்துடன் 3½ கப் தண்ணீர், பால்,  சேர்த்து குக்கரில் 5,6 சத்தங்கள் வரும்வரை குழைய வேகவிடவும்.

குக்கரைத் திறந்து அதில் தேவையான உப்பு, மஞ்சள்பொடி  சேர்க்கவும்.  4 டீஸ்பூன் நெய்யைக் காயவைத்து  முந்திரிபருப்பு,  காய்ந்த திராட்சை வறுத்துப் போடவும். 

மேலும் 2 டீஸ்பூன் நெய்யில் பெருங்காயப்பொடி, கடுகு, பொடியாக நறுக்கிய இஞ்சி,  முழுமிளகு, ஜீரகம்,  கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டவும். 

பொங்கலை மேலும் சுவையாக்க, ½ டீஸ்பூன் மிளகுபொடி நெய்யில் தாளிக்கவும். பொங்கலில்  எல்லாம் சேர்ந்து கொள்ளும்படி நன்கு கிளறவும். பொங்கலின் மீது மீதியுள்ள  நெய் விட்டு சூடாகப் பரிமாறவும். கமகம கல்யாண பொங்கல் ரெடி!

இது கல்யாணங்களில் மங்களகரமாக பரிமாறப்படும்.



Thursday 22 December 2016

ரவா சேமியா தேங்காய்ப்பால் பொங்கல்



தேவை 
வறுத்த ரவா -- 1கப்
வறுத்த சேமியா -- 1/2 கப்
கடலைப்பருப்பு -- 1/4 கப்
துவரம்பருப்பு -- 5 டீஸ்பூன்
இஞ்சி --  சிறுதுண்டு
முந்திரி -- 10
திராட்சை -- 10
தேங்காய்ப்பால் -- 1/2 கப்
கறிவேப்பிலை -- 1 கொத்து
மிளகு -- 1/2 டீஸ்பூன்
மிளகு சீரகப்பொடி -- 1 டீஸ்பூன்
நெய் -- 6 டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு

செய்முறை
கடைகளில் ரோஸ்டட் ரவாவும், சேமியாவும் கிடைக்கும். அவற்றை உபயோகித்து பொங்கல் செய்யலாம்.
பருப்புகளை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். குக்கரில் வேகவிடவும்.

2 கப் தண்ணீருடன் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விட்டு அதில் சேமியாவை சேர்க்கவும். 
முக்கால் அளவு வெந்ததும், அத்துடன் ரவாவை சேர்த்து வேகவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

இரண்டையும் சேர்த்து வேகவிட்டால் ரவை அதிகம் வெந்து கூழாகி விடும்.

வாணலியில் நெய்யை விட்டு இஞ்சி,மிளகு, முந்திரி, திராட்சை, மிளகு சீரகப்பொடி, கறிவேப்பிலை போட்டு வதக்கி  பொங்கலில் கொட்டி நன்கு கலக்கவும்.

ரவா,சேமியா சரி அளவு சேர்த்தும் செய்யலாம்.

சட்னியுடன் பரிமாறவும்.



Saturday 2 July 2016

மலாய் பேடா

பால் – 1 லிட்டர் 
சீனி – 150 கிராம்
சோளமாவு – 1 டீஸ்பூன் (நீரில் கரைக்கவும்)
ஏலப்பொடி, பிஸ்தா. 

செய்முறை
பாலை அடுப்பில் வைத்து கோவா பதம் வரும் வரை கிளறவும். அடுப்பை சிறிதாக வைத்து அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 

நல்ல கெட்டியானதும், சர்க்கரை, சோளமாவு சேர்த்துக் கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும். 

கெட்டியாக பந்து போலான கலவையை ஆற விடவும். அவற்றை சிறிய உருண்டையாக்கி, நடுவில் கட்டை விரலால் அமுக்கி, அதில் ஒரு பிஸ்தா துண்டை வைத்து எடுத்து வைக்கவும். 

இதில் சர்க்கரை சேர்க்கும் போது, சில இதழ்கள் குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்த்தால் அதற்கு பெயர் ‘கேஸர் மலாய் பேடா’. செய்வதற்கு எளிய இனிப்பு இது!

காஜர் கா ஹல்வா

காஜர் என்பது கேரட். இது பஞ்சாபில் செய்யப்படும் இனிப்பு.
தேவை 
கேரட் துருவல் – 1 கப்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 11/2 கப்
நெய் -1 கப்
கோவா - 1/4 கப்
மிந்திரி – 15
திராட்சை – 15, ஏலப்பொடி, குங்குமப்பூ.
செய்முறை
கேரட் துருவலை பாலில் குக்கரில் வேக விடவும். வெந்த கேரட்டை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 

அடி கனமான பாத்திரத்தில் இதைப் போட்டு கொதிக்க விட்டு, சற்று கெட்டியானதும் இதில் கோவா, சர்க்கரை போட்டு, சேர்ந்து கொண்டதும், நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும். 

ஹல்வா பதம் வந்ததும் மிந்திரி, திராட்சை, ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

பாம்பே மிக்சர்

தேவை   
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 கப்
பச்சைப் பயறு – 25 கிராம்
நிலக்கடலை – 50 கிராம்
முந்திரி – 25 கிராம்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – அம்சூர் பவுடர் -1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -2 கொத்து
திராட்சை – 10 கிராம்
எண்ணெய், விழுது நெய் – 6 டேபிள் ஸ்பூன்
காரப்பொடி – 1 டீஸ்பூன்
அவல் – 1 கப்
சோடா உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை

ஓமப்பொடி தயாரிக்க
1/2 கப் கடலை மாவுடன்1/4 கப் அரிசி மாவு, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்துப் பிசைந்து ஓமப்பொடி அச்சில், காய்ந்த எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
காரா சேவை தயாரிக்க:
1/2 கப் கடலை மாவுடன்1/4 கப்புக்கு சற்று குறைவாக அரிசி மாவு சேர்த்து, உப்பு, காரப்பொடி, விழுது நெய் மூன்று டீஸ்பூன் சேர்த்து காராசேவை தயாரிக்கவும்.
பூந்திக்கு:
1/2 கப் கடலை மாவுடன் மீதமுள்ள சிறிது அரிசி மாவைச் சேர்த்து, உப்பு, சோடா உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைத்து பூந்தி தயாரிக்கவும்.
பச்சைப் பயறை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து வடிகட்டிப் பரவலாக சற்று உலர்த்தவும்.
எண்ணெயைக் காயவைத்து பாசிப் பயறை கை கையாகப் போட்டு வறுத்து எடுக்கவும். அவலையும் சுத்தம் செய்துவிட்டுப் பொரித்து எடுக்கவும். முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் வறுக்கவும்.
ஓமப்பொடி, காரா சேவை, பூந்தி, வறுத்த பயறு, அவல், முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை இவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அத்துடன் காரப்பொடி, உப்பு, சாட்மசாலா, அம்சூர் பொடி, சர்க்கரை சேர்த்து 2 டீஸ்பூன் நெய்யை உருக வைத்து ஊற்றி நன்கு கலக்கவும். 

இனிப்பு, புளிப்பு, காரம் கலந்த சுவையுடன் பாம்பே மிக்ஸர் மிக ருசியாக இருக்கும்.

சக்லி(மகாராஷ்டிரா)

தேவை 
கடலைப் பருப்பு    -      1 கிலோ
பச்சரிசி                -      2 கிலோ
உளுத்தம் பருப்பு    -      1 கப்
பயத்தம் பருப்பு            - 1/2 கப்
அவல்                   -      2 கப்
சீரகம்                   -      50 கிராம்
தனியா                 -      50 கிராம்
பொட்டுக்கடலை   -     1/2    
ஓமம் --4 டேபிள் ஸ்பூன்
உப்பு, காரப்பொடி - தேவையான அளவு
எண்ணெய்  -- வேகவிட 

கடலைப் பருப்பு, அரிசியைக் களைந்து சிறிது நேரம் ஊறவைத்துக் காயவிடவும். மற்ற ருப்புகளையும், அவலையும் தனித்தனியாக வாணலியில் பொன்னிறமாக வறுத்து, அத்துடன் சீரகம், பொட்டுக்கடலை, தனியா, ஓமம் மற்றும் காய்ந்த அரிசி-கடலைப் பருப்புக் கலவையையும் போட்டு மிஷினில் நைஸாக அரைக்கவும். 

அரைத்த மாவுடன் உப்பு, காரப்பொடி சேர்த்து, சிறிது வெண்ணெயும் சேர்த்து, நீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும்.

முள்ளுத் தேங்குழல் ஒற்றைத் துளைத் தட்டில் மாவைப் போட்டு, பிளாஸ்டிக் பேப்பரில் கைமுறுக்கு போல் வட்டமாகச் சுற்றவும்.   எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

சற்று அடர் சிவப்பு நிறமாக இருக்கும் சக்லி, ருசியில் ‘ஏ’ ஒன்!

சுக்கு பால்


தேவை
சுக்கு - 25 கிராம்
பச்சரிசி - 25 கிராம்
தேங்காய்ப்பூ - 1/4கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பனங்கல்கண்டு - 50 கிராம்
பால் - 1/2 லிட்டர்
ஏலக்காய் - 2
செய்முறை :
சுக்கை தட்டி அத்துடன் ஏலக்காய், மிளகு, பச்சரிசியை ஊற வைக்கவும்.
பாலை நன்றாக காய்ச்சவும்.
ஊறியவற்றை அரைத்து சிறிது தண்ணீர் , மஞ்சள் தூள், தேங்காய் பூ சேர்த்து அடுப்பில் வைத்துக் கூழ் பதத்திற்குக் காய்ச்சவும்.
பிறகு பால், பனங்கல்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் பருகவும்.

Wednesday 22 June 2016

ராஜ்மா பட்டாணி சாதம்

தேவை
பாஸ்மதி அரிசி - 1 கப்
ராஜ்மா - 1/4 கப்
கேரட் - 1
பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1
உப்பு - தேவைகேற்ப்ப


அரைக்க 
தக்காளி - 1
பூண்டு - 1 பல்
இஞ்சி- 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - கொஞ்சம்
காரப்பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்


தாளிக்க 
எண்ணெய் - 4  டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன் 
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2

ராஜ்மாவை முதல் நாளே ஊறவைக்கவும்.மறுநாள் பட்டாணி, நறுக்கிய கேரட்டுடன் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.வேக வைத்த தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியை நன்கு களைந்து பட்டாணி, ராஜ்மா வேகவைத்த நீருடன் மேலும் நீர் சேர்த்து உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் தாளிக்க உள்ளதைப் போட்டு தாளிக்கவும்.

பின் அதில் வெங்காயம், தக்காளி, அரைத்த மசாலாசேர்த்து பச்சை வாசனை போக, எண்ணெய்  பிரிய நன்கு வதக்கவும். அத்துடன் முன்பே பிரஷர் குக்கரில் வேக வைத்த பட்டாணி,ராஜ்மா எல்லாவற்றையும் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியபின் அதில் வேகவைத்துள்ள சாதத்தை போட்டு, தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் நெய் விட்டு ஒன்றாகக்  கலந்து மேலே கொத்தமல்லி இலை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

இதற்க்கு தொட்டு கொள்ள வெங்காய, தக்காளி தயிர் பச்சடி, பொரித்த அப்பளம் நன்றாக இருக்கும்.

மாம்பழ மோர்க்குழம்பு

தேவை
மாம்பழம் - ஒன்று
கெட்டியான லேசாக புளித்த மோர் -அரை லிட்டர்
மிளகாய் வற்றல் - 2
வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1/2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடுகு - அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்துமல்லி

செய்முறை:
மாம்பழத்தை தோல் சீவி கோட்டை நீக்கி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு  துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து,  சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து... மோருடன் கலக்கவும்.

இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்து வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரு கொதி கொதித்து வந்ததும் இறக்கவும்.

எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். பிசைந்த சாதம், துவையல் சாதத்திற்கு நல்ல மேட்ச் இந்த மோர்க் குழம்பு!

பனானா இட்லி

தேவை
 ரவை – 1 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
கனிந்த பச்சை வாழைப்பழம் – 3-4 (மசித்தது)
உப்பு – 1 சிட்டிகை
ஏலப்பொடி  - 1 டீஸ்பூன்
முந்திரி துண்டுகள் - 1 டீஸ்பூன்
வெல்லம் – 1/2 கப் (தேவைக்கேற்ப)
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, ரவை, துருவிய தேங்காய், உப்பு, வெல்லம், ஏலப்பொடி, முந்திரி துண்டுகள்பேக்கிங் சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நெய்யைத் தடவி, இந்த மாவை இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தின் உள்ளே வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான பனானா இட்லி ரெடி!

இட்லி சினிமினி

தேவை
இட்லி – 6
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி- 1 தேக்கரண்டி(துருவியது)
பச்சைமிளகாய் - 1
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு -சுவைக்கு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை
இட்லிகளை  சதுரமாக, அல்லது வட்டமாக நறுக்கவும்.

அதனுடன் அனைத்துப் பொருட்களையும் நெய்யுடன் கலந்து நன்கு பிசிறவும்.

எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளைப் பொரித்தெடுக்கவும். அல்லது இட்லிகளைப் பொரிக்காமல் வதக்கியும் செய்யலாம்.

கொத்தமல்லி தூவி அலங்கரிக்கச் சுவையான இட்லி சினிமினி தயார்.

இட்லிகளை இந்த மாதிரி வித்யாசமான முறையிலும், மீந்த இட்லிகளை மாலையில் இம்முறையிலும்  செய்யலாம்.

Saturday 18 June 2016

பீட்ரூட் ஹல்வா

தேவை
துருவிய  பீட்ரூட் - ஒரு கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - 8 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - 6
சர்க்கரையில்லாத பால்கோவா - 2 டேபிள்ஸ்பூன் (உதிர்த்துக் கொள்ளவும்).

செய்முறை
அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்து, துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனவுடன் பாலுடன் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

வாணலியில் போட்டு கிளறி, சர்க்கரை சேர்த்துக் கிளறி சேர்ந்து கொண்து, கெட்டியானதும் உதிர்த்த பால்கோவா சேர்த்து நெய்,ஏலப்பொடி, மிந்திரி   சேர்த்து மேலும் கிளறி இறக்கவும்.




ஜவ்வரிசி உப்புமா

தேவை
மீடியம் அளவு ஜவ்வரிசி – 1 கப்
தண்ணீர் – 1 கப்
நிலக்கடலை – 1/4 கப்
பச்சை மிளகாய் –5
தேங்காய்  துருவல் ​ --  1/4 கப்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
தாளிக்க – கடுகு,சீரகம்,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை
ஜவ்வரிசியை நன்றாக கழுவி விட்டு கால் மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு ஈரப் பதத்திலேயே
ஒரு மணி நேரம் ஊற வைத்து விடவும்.

நிலக்கடலையை தோல்நீக்கி,சற்று வறுத்து பொடியாக்கவும்.தேங்காய்,3 பச்சை மிளகாயை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து
ஊறவைத்த ஜவ்வரிசியும், உப்பும் சேர்த்து சில  நிமிடங்களுக்கு வதக்கவும்.

ஜவ்வரிசி வெந்ததும், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறி, கடலைப் பொடியை சேர்த்து கிளறவும் அடுப்பை அணைத்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு நன்கு மூடி வைக்கவும்.
 
பின் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித் தழை தூவி நன்கு கலந்து பரிமாறவும்.

Thursday 16 June 2016

பனீர் பாயசம்

தேவை
கொழுப்பு நீக்காத பால் - 2 கப்
பன்னீர் துருவல் -  3/4 கப்
சர்க்கரை  - 1/4 கப்
கண்டஸ்ட் மில்க்  - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
முந்திரி,பாதாம் பருப்பு வகைகள்(சிறு துண்டுகளாக்கியது) ஒரு கைப்பிடி
பாதாம் பால் - 1/4 கப்
குங்குமப்பூ  - 4,5 இதழ்கள்
ரோஜா அல்லது வெனிலா எசன்ஸ் - சில துளிகள்

செய்முறை
பன்னீரை  கேரட் துருவி மூலம் துருவிக் கொள்ளவும்.15 பாதாம்களை  சூடான பாலில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

பாலை நன்கு காய்ச்சி அதில் சர்க்கரை  சேர்த்து,அந்த பால் கலவையை 5 நிமிடம் கொதிக்க விடவும். பாதாம் பாலை சேர்க்கவும்.ஏலப்பொடி மற்றும் கண்டஸ்ட் மில்க்கை சேர்க்கவும்.




ஐந்து  நிமிடம் கொதித்தபின் துருவிய பன்னீரை சேர்க்கவும். மேலும் ஐந்து நிமிடம் கொதித்த பின்  வெனிலா அல்லது ரோஜா எசன்ஸை சேர்க்கவும். குங்குமப்பூ சேர்க்கவும்.பாயசம் கெட்டியாக ஆன பின் அடுப்பை அணைக்கவும்.

இக்கலவை ஆறியவுடன் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பின்னர் பொடித்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.




இதை கண்டஸ்ட் மில்க், எசன்ஸ் சேர்க்காமலும் செய்யலாம். திடீர் விருந்தினர்கள் வரும்போது எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம் இது.

Monday 13 June 2016

பஞ்சாபி தால் தட்கா

பஞ்சாபில் செய்யப்படும் இந்த தட்கா சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட நல்ல மேட்ச்.

தேவை
பயத்தம் பருப்பு (அ )மசூர் தால் - அரை கப்
சீரகம் - கால் டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
பச்வ்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
காரப்பொடி, மஞ்சள்பொடி  - தலா கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கொத்தமல்லி  - சிறிதளவு
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.




செய்முறை
பயத்தம்பருப்பை நன்கு வேக விடவும்.
வாணலியில்  எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.






அதில் மஞ்சள் தூள், காரப்பொடி சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த பயத்தம் பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு  சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.





நெய்யில் சீரகம், மிளகாய் வற்றல்,கரம் மசாலா சேர்த்து தாளித்து தட்காவில் கொட்டவும்.
எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.





துளசி கஷாயம்

தேவை
துளசி - 2 கைப்பிடி,
சுக்கு - 1 துண்டு,
மிளகு - 20,
ஏலக்காய் - 5,
தனியா - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 20,
பனங்கல்கண்டு
அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.

செய்முறை
சுக்கு, மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 

அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். 

அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.

வயிற்றில் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் .சளி பிடிக்காமல் தடுக்கும்.

Wednesday 8 June 2016

பீஸ் பனீர் புலாவ்

பச்சை பட்டாணி - 1/2 கப்
(காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.)
பனீர் - 100 கிராம்
(சிறிய சதுரங்களாக வெட்டி எண்ணையில் இளஞ்சிவப்பாக பொரித்து வெதுவெதுப்பான நீரில் போட்டு வைக்கவும்.)
பாசுமதி அரிசி - 1 கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
நெய் - 3 டீஸ்பூன் 
எண்ணெய் - 6 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்ப்பால் - 1/2 கப்
மல்லி தழை - சிறிது
அரைக்க:
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
தாளிக்க
பிரிஞ்சி இலை -2
கறிவேப்பிலை - சிறிது
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - சிறு் துண்டு
நெய் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவைக்கு



செய்முறை

காய்ந்த பட்டாணியாக இருந்தால் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணி என்றால் உடனடியாக சமைக்கலாம்.

பாசுமதி அரிசியைக் களைந்து நீரை வடிய வைத்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.



அதனுடன் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி பட்டாணியும் சேர்த்து நன்கு வதக்கவும்.



அதில் அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேங்காய்ப் பாலுடன், மேலும் 3/4 கப் நீர் சேர்த்து, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெய்ட் போடவும்.

கேஸை சிம்மில் வைத்து 10  நிமிடம் வைத்திருந்து அணைக்கவும்.மூடியை திறந்து பனீர் துண்டுகளை சேர்க்கவும்.

நெய்யில் மிந்திரி, திராட்சை, கரம் மசாலா சேர்த்து வதக்கி புலாவில் சேர்க்கவும்.

நறுக்கிய கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு முறை அடி வரை கிளறி விட்டு பின் பரிமாறவும். சுவையான பீஸ் புலாவ் ரெடி.



ராய்தா, பொரித்த அப்பளத்துடன் சாப்பிடவும்.

Tuesday 7 June 2016

மிக்ஸட் வெஜிடபிள் குருமா


பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைப் பட்டாணி -1/2 கப்
சிறிதாக நறுக்கிய பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், கேரட்- தலா 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் -1 1/2  டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2  டீஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பிரிஞ்சி இல்லை - 2
எண்ணெய் - 5 டீஸ்பூன்
அரைக்க
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
முந்திரிப் பருப்பு -10 ( வெந்நீரில் ஊற வைக்கவும்.)
பச்சை மிளகாய் -2
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு, லவங்கப்பட்டை - 2
ஏலக்காய் - 2



செய்முறை
காய்கறிகளை தேவையான நீரில் வேக வைக்கவும். நீரை வடியவைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

தேங்காய், சீரகம், முந்திரிப் பருப்பு, சீரகம், ப.மிளகாய், கிராம்பு, லவங்கப்பட்டை ஏலம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். 



கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும். 




 அத்துடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, கெட்டியானதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறவும்.தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.




வெந்த காய்கறிகள் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து வேகவைத்த நீர் சேர்த்து கிளறவும். சற்று கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.கொத்துமல்லி சேர்த்து, சப்பாத்தி, ரொட்டி, புலாவுடன் பரிமாறவும்.



Tuesday 31 May 2016

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி

தேவை 
பாசுமதி அரிசி – 1 கப்
பட்டாணி – 1/2 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி -  2 (பொடியாக நறுக்கியது)
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி  - சிறுதுண்டு  
மிளகாய் பொடி  – 1 டீஸ்பூன்
தனியாபொடி  - 1 டீஸ்பூன்
பூண்டு  - 3 பற்கள்
தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 2
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2

செய்முறை
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, களைந்து வடிய வைக்கவும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்க்கவும்.

தக்காளி நன்கு குழைய வெந்து சேர்ந்து கொண்டபின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக எண்ணெய் பிரியும்வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி ஆவி வந்தபின் வெயிட் போட்டு  சிம்மில் வைக்கவும்.

பத்து நிமிடம் கழித்து, குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு கிளறிவிட்டு, மேலே முந்திரி வறுத்து சேர்த்து, கொத்துமல்லி பொடியாக நறுக்கிப் போட்டு அப்பளம் மற்றும் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

Monday 30 May 2016

இஞ்சி தொக்கு


தேவை
நறுக்கிய இஞ்சி துண்டுகள் --- 1/2 கப்
மிளகாய் வற்றல் ---4
மஞ்சள் தூள் --- 1/4 டீஸ்பூன்
புளி --- பெரிய  நெல்லிக்காய் அளவு
வெல்லம் --- பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு.
தாளிக்க
நல்லெண்ணை --- 8 டேபிள் ஸ்பூன்
கடுகு  --- 1/2 டீஸ்பூன்
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும்  மிளகாய் வற்றல் போட்டு கருகாமல் வறுத்தெடுத்து அதே எண்ணையில் இஞ்சி துண்டுகளையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

வறுத்தெடுத்த மிளகாய், இஞ்சி நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைத்து கடைசியாக வெல்லத்தையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளவும்.

மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து  மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுது, மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை சுருள வதக்கி இறக்கவும்.

சூப்பரான சுவையில் காரசாரமான இஞ்சி தொக்கு தயிர் சாதத்துக்கு அருமையாக இருக்கும்.

சுக்குமல்லி காபிப் பொடி

தேவை 
கொத்துமல்லி விதை – 2 கப்
மிளகு – 2 கப்
ஜீரகம் – 1 கப்
சுக்கு – ஒரு துண்டு (1 ரூபாய் அளவுள்ளது)
கிராம்பு – 6
ஏலக்காய் – 3

செய்முறை 
ல்லா சாமான்களையும் வெறும் வாணலியில் சற்று சூடுவர வறுத்து, மிக்ஸியில் நைஸாக பொடி செய்யவும்.

1 டம்ளர் சுக்கு காபி தயாரிக்க, ஒரு ஸ்பூன் பொடியை ¾ டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும்.  

நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி, சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு 2 ஸ்பூன் சேர்த்து, பால் சேர்த்து சாப்பிடவும். 

அஜீரணம், வயிற்றுக் கோளாறு இவைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். இதே போன்று தயரித்த டிகாக்ஷனில், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடவும்.

இந்தப் பொடியை தேவையான அளவு செய்து வைத்துக் கொண்டு குளிர் காலங்களிலும், தொண்டைக்கட்டு, ஜலதோஷத்தின்போதும் போட்டு சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தேங்காய் சட்னிப் பொடி


 
தேவை:
உளுத்தம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – 1/2  கப்
கொப்பரைத் தேங்காய் – 1
புளி – ஒரு சிறு எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் – 16
பெருங்காயம் - சிறு துண்டு
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
வெறும் வாணலியில் பருப்புகளை சிவக்க வறுக்கவும். கொப்பரையைத் துருவி 2 ஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுக்கவும். 

மேலும் சிறிது எண்ணெயில் பெருங்காயம், மிளகாய் வற்றலை வறுத்து, பருப்புகள், தேங்காய், மிளகாய் வற்றல், புளி பெருங்காயத்துடன் தேவையான உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். 

இது சாதத்திற்கு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். பூரி, சப்பாத்திக்கு இது மிக நன்றாக இருக்கும்.

மணத்தக்காளிவற்றல் பொடி

உப்பு போடாமல் காய வைத்த மணத்தக்காளி வற்றல் 1 கப் அளவிற்கு தேவை
மிளகாய் வற்றல் – 10
உளுத்தம் பருப்பு – 6 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
ஜீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் சிறிது
உப்பு  தேவையான அளவு 
நல்லெண்ணெய்  4 டீஸ்பூன் 
 
செய்முறை 
நல்லெண்ணெயில் மணத்தக்காளி வற்றல், மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, சீரகத்தை வறுக்கவும்.

உப்புன் வறுத்த மணத்தக்காளி வற்றல், மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, சீரகத்தை முதலில் அரைத்துக் கொண்டு, பின்பு உளுத்தம் பருப்பைப் போட்டு சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். 

ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் சாதத்தில் ஊற்றி இப்பொடியுடன் பிசந்து சாப்பிட வயிற்றுக் கோளாறுகள், பேதி இவை உடன் சரியாகும். 

மணத்தக்காளி இலையைக் காய வைத்தும், மேற்கூறியபடி பொடி செய்து சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப் புண் இவை நீங்கும்.

ரவா லட்டு

தேவை
ரவை  -  1 கப்
சர்க்கரை  -  1 1/4 கப்
நெய்  -  1/2 கப்
ஏலப்பொடி  -  1 டீஸ்பூன்
முந்திரி  -  15
திராட்சை  - 10

செய்முறை
5 டீஸ்பூன் நெய்யில் ரவையை சற்று சிவக்க வறுக்கவும்.மிக்சியில் நைசாக அரைத்து சலிக்கவும்.
சர்க்கரையையும்  மிக்சியில் பொடி செய்து சலிக்கவும். ரவை மாவுடன் சர்க்கரைபொடி, ஏலப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

2 டீஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து அத்துடன் சேர்த்து, நெய்யை நன்கு சுடவைத்து மாவில் விட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

விருப்பமானால் அரை கப் தேங்காயை நெய்யில் வறுத்து சேர்த்து லட்டு பிடிக்கலாம்.
வித்யாசமான சுவையுடன் இருக்கும்.


கொத்துமல்லி பொடி

ஒரு கப் அளவு பச்சை கொத்துமல்லி தழையை வேர் நீக்கி சுத்தம் செய்து, அலம்பி வெயிலில் நன்கு காய வைக்கவும். 

ஒரு கப் அளவு கொத்துமல்லிக்கு எண்ணெயில் வறுக்க வேண்டிய சாமான்கள்: மிளகாய் வற்றல் – 15
உளுத்தம் பருப்பு – 4 ஸ்பூன்
கடலைப் பருப்பு – 6 ஸ்பூன் 
புளி – கொட்டைப் பாக்களவு
பெருங்காயம் சிறிது
உப்பு தேவையான அளவு
மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, புளியைப் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

நைஸானதும் கொத்துமல்லித் தழையைப் போட்டு அரைக்கவும். கடைசியாக பருப்புகளைப் போட்டு அரைக்கவும். 

பருப்புகளை சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும். இந்த கொத்துமல்லி பொடி சற்று ஈரப்பசையோடு இருக்கும். பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை வைத்துக் கொள்ளலாம். 

பிசைந்து சாப்பிடவும், தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளவும் மிக நன்றாக இருக்கும்.

Sunday 29 May 2016

அசோகா அல்வா

அசோகா ஹல்வா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் மிக பிரபலமான, ருசியான  இனிப்பு. அதன் செய்முறை எழுதியுள்ளேன்.
தேவை
பயத்தம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
கோதுமைமாவு - 1/2 கப்
நெய் - 2 கப்
பால்  - 1/2 கப்
ஏலப்பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -15
திராட்சை  -  10
சீவிய பாதாம்  - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ  - சில இதழ்கள்.
கேசரி பவுடர் - 4 சிட்டிகை
செய்முறை
பயத்தம் பருப்பை இலேசாக வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் ஒரு கப் தண்ணீர் மற்றும் பாலுடன் சேர்த்து  நன்கு குழைய வேக வைக்கவும்.

2 ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பை வறுத்து எடுக்கவும்.அதில் மேலும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து  சுடவைத்து,கோதுமை மாவை பொரித்தாற்போல்  வாசனை வரும் வரை வறுக்கவும்.

ஒரு வாணலியில் வெந்த பயத்தம்பருப்பு போட்டு நன்கு மைய மசிக்கவும். பருப்பு அரை வேக்காட்டில் இருக்கக் கூடாது. அதனுடன் பொரித்த கோதுமை மாவு சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டும் சேர்ந்து கொண்டு கெட்டியானதும் சர்க்கரை சேர்க்கவும்.கேசை சிறிதாக்கி கை விடாமல் கிளறவும்.

பாத்திரத்தில் ஒட்டும் சமயம் சிறிது சிறிதாக நெய்யை விட்டுக் கிளறவும். கேசரி பவுடர், குங்குமப்பூ சேர்க்கவும்.

கரண்டியில்  ஒட்டாமல் நெய் பிரிந்து நன்கு சுருண்டு வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.

விருப்பப் பட்டால் திராட்சை, பாதாம் துண்டுகள் நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

சுவையான திருவையாறு ஒரிஜினல் அசோகா ஹல்வா வாயில் போட்டால் கரையும்.




Friday 27 May 2016

மட்டர் பனீர்




பனீர்  -  150 கிராம்
பட்டாணி  -  1 கப்
தக்காளி -  2
பெரிய வெங்காயம்  -  2
இஞ்சி  - சிறு துண்டு
பச்சை மிளகாய்  - 2
 பூண்டு - 4 பல்
மிந்திரி விழுது  - 2 டீஸ்பூன்
ஜீரகம்  - 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி  -  1 டீஸ்பூன்
தனியாபொடி  - 1 1/2 டீஸ்பூன்
காரப்பொடி   - 2  டீஸ்பூன்
கரம்மசாலா  - 1 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
எண்ணெய் -  6 டீஸ்பூன்
வெண்ணெய்  -  3 டீஸ்பூன்
பால்  - 1/2 கப்
கொத்துமல்லி
செய்முறை
பட்டாணியை வேக வைக்கவும். பனீரை சிறு சதுர துண்டுகளாக்கவும். முந்தியை சிறிது வெந்நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.


3 டீஸ்பூன் எண்ணெயில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு வதக்கி, அதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
நன்கு வதக்கியதும் அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து  வதக்கி மிக்சியில் அரைக்கவும்.


வெண்ணையுடன் மீதமுள்ள எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த தக்காளி, வெங்காய விழுது சேர்த்து நன்கு எண்ணெய் பிரிய வதக்கவும். அதில் மஞ்சள்பொடி, தனியாபொடி, காரப்பொடி, கரம் மசாலா சேர்க்கவும்.


நன்கு சேர்ந்து கொண்டதும் முந்திரி விழுது, பால் மற்றும் தேவையான அளவு நீர் சேர்க்கவும். கொதித்ததும் வெந்த பட்டாணி சேர்த்து கிளறவும்.




எல்லாம் சேர்ந்து கெட்டியானதும், பனீர் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.



பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து மேலே சிறிது வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி, நான், பூரியுடன் பரிமாறவும்.




 


Thursday 26 May 2016

பயத்தம் பருப்பு வடை

தேவை
பயத்தம்பருப்பு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் வற்றல்  – 5
இஞ்சி – சிறு துண்டு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பயத்தம் பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை நன்கு களைந்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகாய் வற்றல், இஞ்சி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, உப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான பயத்தம்பருப்பு வடை ரெடி!!!

ஃப்ரூட் கேசரி

தேவை
ரவை - 1 கப்
பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 1 /2 கப்
திராட்சை - 50 கிராம் 
அன்னாசி துண்டுகள்  - 1/4 கப்
சர்க்கரை - 11/4  கப்
நெய் - 1/2  கப்
முந்திரி - 10
பால்  - 1/2 கப்
தண்ணீர்  -  1 1/2 கப்
ஏலப்பொடி - 2  சிட்டிகை
குங்குமப்பூ - சில இதழ்கள்.
செய்முறை
ஆப்பிள்,  திராட்சையை  சிறு  துண்டுகளாக்கவும்.அவற்றை 1/2 கப் சர்க்கரையுடன் கலந்து வைக்கவும்.
முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் விட்டு  முந்திரி வறுத்து எடுத்து  ரவையை  சற்று சிவக்க வறுக்கவும்.



அதில் பால் மற்றும் தண்ணீரை சேர்க்கவும். தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளவும்.இல்லையெனில் கட்டி தட்டிவிடும். கிளறுவது கஷ்டம்.




ரவை நன்றாக வெந்த பிறகு சர்க்கரை மற்றும் பழங்களை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
எல்லாம் சேர்ந்து கொண்டு கெட்டியானதும், நெய்யை விட்டுக் கிளறவும்.





பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தபின் குங்குமப்பூ, ஏலப்பொடி,வறுத்த முந்திரி  சேர்த்து கிளறவும்.இதற்கு கேசரி பவுடர் சேர்க்க தேவையில்லை.



சுவையான  ஃப்ரூட் கேசரி ரெடி. பார்ட்டிகளுக்கு ஏற்ற இனிப்பு இது.
இதில் மாம்பழம், பலாப்பழம் இருந்தாலும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி சேர்க்க சுவை அருமையாக இருக்கும்.
அதற்கேற்றவாறு சர்க்கரையை சற்று அதிகமாக சேர்க்கவும்.



அடைமாவு குணுக்கு

முதல் நாளைய அடைமாவு - ஒரு கப் 
கேரட் துருவல் - 1/4 கப்
நறுக்கிய வெங்காயம்  - 1/4 கப்
ஊறவைத்த ரவா - கால் கப்
உப்பு - கால் தேக்கரண்டி
அரிசிமாவு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு கப்
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ரவாவை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். மற்றப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடைமாவுடன் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம்,ஊற வைத்த ரவா மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.
இவற்றை ஒன்றாக கலந்தப் பின்னர் மாவு கெட்டியாக அதனுடன் அரிசிமாவு கலந்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போடவும்.
இருப்பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும். லேசான புளிப்புடன் குணுக்கு சுவையாக இருக்கும்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி ஸாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிடவும்.

வாழைத்தண்டு பச்சடி

தேவை
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப்,
மாதுளை முத்துக்கள் – கால் கப்,
பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன்,
புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். இல்லையெனில் கருத்து விடும்.பச்சடி செய்யும்போது பிழிந்து போடவும்.
கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் கெட்டியான  தயிரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Wednesday 25 May 2016

முள் தேன்குழல்

தேவை
பச்சரிசி - 4 கப்,
கடலைப் பருப்பு - 3/4 கப்,
பயத்தம் பருப்பு - 11/4 கப்,
எள் - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கட்டி பெருங்காயம் - சிறிதளவு,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை :
எள்ளை நன்றாக சுத்தம் செய்து கழுவி தண்ணீர் வடித்து உலர்த்தி வைக்கவும்.
சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு, பெருங்காயம், வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும்.
 முள் தேன்குழல்  அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


காரட் ரைஸ்



சாதம்  - 3 கப் 
பெரிய வெங்காயம் -1
உரித்த பட்டாணி - 1/2 கப்
தாளிக்க
கடுகு -  1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு  -  2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்  -  2
மிளகாய் வற்றல்  -  2
கறிவேப்பிலை 
வறுத்து அரைக்க
பெருங்காயம்  - சிறு துண்டு
தேங்காய்த்துருவல்  -  5 டீஸ்பூன்
தனியா  -  2 டீஸ்பூன்
ஜீரகம்  -  2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்  - 4
கடலைப்பொடி  -  4 டீஸ்பூன்   
எண்ணெய் -  5 டீஸ்பூன்
நெய் -  3 டீஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு
செய்முறை
காரட்டை துருவவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பெருங்காயம், ஜீரகம், தனியா, மிளகாய் வற்றல், தேங்காய்  வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.











மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், ப.மிளகாய் தாளித்து, கறிவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம் வதக்கவும்.



வெங்காயம் வதக்கியதும் அதில் காரட், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.


நன்கு வதக்கி சேர்ந்து கொண்டதும், கடலைப்பொடி மற்றும் அரைத்தபொடி சேர்த்து நன்கு கலக்கவும்.




அதிலேயே சாதம் சேர்த்து, கேசை சிறிதாக்கி, நன்கு கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும். நெய்யில் முந்திரி, கடலை வறுத்து சேர்க்கலாம்.